மும்பை : இந்திய டி20 அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டார். அவருக்கு மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டார். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் ஆடுவதும் சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது அவருக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் அவருக்கு இன்னும் குணமாகாத நிலையில் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், தற்போது இந்திய அணியில் ஒவ்வொரு இடத்தை பிடிக்கவும் கடும் போட்டி நிலவி வருகிறது. நான்கு வீரர்கள் துவக்க வீரர்களாக களமிறங்க போட்டி போட்டு வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர் என்பதால் தன் இடத்தை நிரந்தரமாக்க அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
அதே சமயம், இந்திய டி20 அணியில் சுப்மன் கில், ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோரும் துவக்க வீரர்களாக இடம் பெற போட்டி போட்டு வருகின்றனர். ரோஹித் சர்மாவை வெளியேற்ற முடியாது என்பதால் பிசிசிஐ அவரை துவக்க வீரராக தேர்வு செய்யும். மீதமுள்ள ஒரு இடத்துக்கு ஜெய்ஸ்வால், ருதுராஜ், சுப்மன் கில் இடையே போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மாற்று துவக்க வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவரது மோதிர விரல் காயம் குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகும் என்பதே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.