மும்பை : இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக ஆட வேண்டும் என்பதால் அனைத்து முக்கிய வீரர்களையும் இந்த தொடரில் களமிறக்கி இருக்கிறது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அணியின் முதன்மை பலமே ஸ்பின்னர்கள் தான். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய ஸ்பின்னர்களான முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோர் அணியில் இடம் பெற்று உள்ளனர். பேட்டிங்கில் சமீபத்தில் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ஆல் - ரவுண்டர் அஜ்முல்லா ஓமர்சாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் இல்லாமலே கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை டி20யில் வீழ்த்தி உள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி தன் முழு பலத்தையும் காட்ட முடிவு செய்து வலுவான அணியை அறிவித்துள்ளது. டி20 போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் டி20 தொடர் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
உலகின் முன்னணி டி20 ஸ்பின்னரான ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மீண்டு வரும் நிலையில் அவர் பெயர் உத்தேச அணியில் இடம் பெற்றாலும் அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இந்த ஒரு விஷயம் மட்டுமே ஆப்கானிஸ்தான் அப்னிக்கு பின்னடைவாக உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி -
இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஜ்முல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக்மான், ஃபசல் ஹக்மான், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.