இன்னும் 35 ரன் எடுத்தால் போதும்.. விராட் கோலியின் பிரம்மாண்ட சாதனை
மும்பை : விராட் கோலி அடுத்து நடக்க உள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் 35 ரன்கள் எடுத்தும் பட்சத்தில், வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத இமாலய சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார்.
இந்திய அளவில் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதில் மேலும் ஒரு மைல்கல்லாக 12,000 டி20 ரன்களை குவிக்க இருக்கிறார் விராட் கோலி.

அவர் தற்போது 374 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதில் 357 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 11965 ரன்கள் குவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் 35 ரன்கள் சேர்த்தால் அவர் 12000 ரன்களை எட்டி இந்திய அளவில் முதல் ஆளாக அந்த மைல்கல் சாதனையை படைத்த வீரர் என்ற பெருமையை பெறுவார் விராட் கோலி.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), கீரான் பொல்லார்ட் (12390 ரன்கள்) உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 11035 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கும் வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. டி20 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 41 ஆகும்.
விராட் கோலி கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 2023 ஐபிஎல் தொடரில் மட்டுமே டி20 போட்டிகளில் பங்கேற்றார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் அவர் சர்வதேச டி20 போட்டியில் ஆட உள்ளார். 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் முடிவில் இருக்கும் விராட் கோலி அதற்கு பயிற்சி எடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications