மும்பை : இந்திய டி20 அணியில் ஓராண்டு கழித்து ரோஹித் சர்மா, விராட் கோலி அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே எப்போது டி20 அணிக்கு திரும்ப வேண்டும் என ரோஹித் சர்மா, விராட் கோலி தெளிவாக திட்டம் போட்டு செயல்பட்டு இருக்கின்றனர்.
ஆனால், திலக் வர்மா, இஷான் கிஷன், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் நன்றாக செயல்பட்டும் தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு ரோஹித், கோலி எந்த வகையிலும் காரணம் இல்லை என கூறப்படுகிறது. அவர்கள் ஓராண்டுக்கு முன்பே டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் அணிக்கு திரும்பும் முடிவில் தான் இருந்தனர். ஆனால், பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு தெளிவில்லாமல் செயல்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஓராண்டாக அதிக இடைவெளி இல்லாமல் நடக்கும் உலகக்கோப்பை தொடர்கள் தான் இந்த குழப்பங்களுக்கு காரணம். 2022 நவம்பரில் டி20 உலகக்கோப்பை முடிவுக்கு வந்தது. அடுத்து 2023 ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தயாரானது. அதன் பின் 2023 அக்டோபரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கு இந்தியா தயாராகி ஆடியது. தற்போது 2024 ஜூன் மாதம் மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இரண்டு ஆண்டு இடைவெளியில் நான்கு உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒவ்வொரு விதமான் போட்டிகளுக்கு ஏற்ப வீரர்கள் தங்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயமும் இருந்தது. இதை உணர்ந்தே மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி 2022 டி20 உலகக்கோப்பை முடிந்த உடன் அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அது வரை டி20 தொடர்களில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தனர்.
ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த முடிவை எடுத்த அதே சமயம், ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் காயத்தில் இருந்ததால், அந்த இடைவெளியில் திலக் வர்மா, இஷான் கிஷன், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றனர். ஆனால், தற்போது மூத்த வீரர்கள் பலரும் அணிக்கு திரும்பி வரும் நிலையில் அணியில் அவர்களுக்கான இடம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.