மொஹாலி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் திலக் வர்மா நிதான பேட்டிங் ஆடி சோதித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் ஆடியதால் இந்திய அணி தப்பியது. இதை அடுத்து திலக் வர்மாவை அடுத்த போட்டியில் நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியா சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். சுப்மன் கில் 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார்.

ஆனால், திலக் வர்மா நிதானமாக பேட்டிங் ஆடினார். நிறைய டாட் பால்கள் ஆடினார். எப்படியும் ஒரு ஓவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்டு பின்னர் பவுண்டரி அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திலக் வர்மா தான் சந்தித்த பந்துகளை விட குறைவாக ரன் எடுத்து வந்தார். கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் சிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார்.
அவர் முதல் 3 பந்துகளில் 6 ரன்களை எடுத்த பின் ஒரு ஓவர் முழுவதும் மெய்டன் ஆடி அச்சமூட்டினார். 6வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மானின் ஸ்பின் பந்துகளை சந்திக்க திணறி அவர் மெய்டனாக ஆடி இருந்தார். எனினும், அந்த ஓவர் முடிந்த உடன் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அதை ஈடுகட்டினார். ஆனால், திலக் வர்மா அப்போதும் கூட 100 ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டவில்லை.
அதன் பின்னர் திலக் வர்மா பவுண்டரி அடிக்க ஆரம்பித்த சில பந்துகளில் ஆட்டமிழந்தார். 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இருந்தார். டி20 போட்டிகளில் பிட்ச் பேட்டிங் செய்ய ஒத்துழைத்த நிலையில் இந்த ஸ்ட்ரைக் ரேட் சராசரியானது தான். இது போன்ற காரணங்களால் தான் இந்தியா கடந்த டி20 உலகக்கோப்பையில் தோல்வி அடைந்ததாக விமர்சனம் இருக்கும் நிலையில், அதே போலவே ஆடி இருக்கிறார் திலக் வர்மா.
அடுத்த போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்புவார் என்பதால் திலக் வர்மாவை நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அப்படி இல்லை என்றாலும் கூட சஞ்சு சாம்சனை அவருக்கு பதிலாக ஆட வைக்க வேண்டும் எனவும் சிலர் கூறி உள்ளனர்.