பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். அவர் 6 ரன்கள் எடுத்தால் டி20 வரலாற்றில் மாபெரும் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு இருந்தது. அந்த சாதனையை தவறவிட்டார். . அதே சமயம்,. சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார் விராட் கோலி.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நடைபெற்றது. விராட் கோலி இந்த தொடரில் பேட்டிங் செய்யும் இரண்டாவது போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது, முந்தைய போட்டியில் அவர் 29 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்த பின் வந்தார். வந்த உடன் முதல் பந்தில் மோசமான முறையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் டி20 போட்டிகளில் முதன்முறையாக டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து இருந்தால் அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருப்பார்.
அந்த சாதனை தவறியதால் ரசிகர்கள் சோகமாக இருந்த நிலையில் கோலி டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் சர்வதேச போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன முழு நேர பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இதுவரை சச்சின் 34 டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்தார். அதை முறியடித்த கோலி 35 டக் அவுட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
டக் அவுட் ஆன அனைத்து இந்திய வீரர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜாகிர் கான் 44, இஷாந்த் சர்மா 40, ஹர்பஜன் சிங் 37, அனில் கும்ப்ளே 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து தற்போது விராட் கோலி 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோலி, துபே ஆகியோர் ரன் குவிக்காமல் ஏமாற்றிய போதும் ரோஹித் சர்மா சதம் அடித்தும், ரிங்கு சிங் அதிரடி ஆட்டம் ஆடி 69 ரன்கள் சேர்த்தும் இமாலய இலக்கை எட்ட உதவினர். இந்திய அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது.