இந்தூர் : விராட் கோலிக்கு ஸ்பின் பந்துகளில் ரன் குவிப்பதில் பிரச்சனை உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி அவருக்கான சோதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்த விவகாரம் காரணமாகவே கோலி டி20 அணியில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
தற்போது மீண்டும் டி20 அணிக்கு திரும்பி இருக்கும் விராட் கோலி, ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஸ்பின் பந்துவீச்சில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவில்லை என்றால் ஓரங்கட்ட ஒரு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன?
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி தான். ஆனால், டி20 போட்டிகளில் ரன் குவிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஸ்ட்ரைக் ரேட்டும் முக்கியம். டி20 போட்டிகளில் 120 - 130 ஸ்ட்ரைக் ரேட்டில் 40 பந்தில் 50 ரன் அடிக்கும் வீரரை விட, 15 பந்தில் 25 - 30 ரன் அடிக்கும் வீரரே சிறந்தவர்.

அந்த வகையில் பார்த்தால் 2020க்கு பின் விராட் கோலி ஸ்பின் பந்துவீச்சில் மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். 2020 முதல் 2023 வரை ஐபிஎல் தொடரில் ஸ்பின் பந்துவீச்சில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 108 மட்டுமே. அவர் விக்கெட்டையும் இழக்கவில்லை. அதே சமயம் ரன்னும் எடுக்கவில்லை. டி20 போட்டிகளில் இத்தகைய பேட்டிங் அணியை வீழ்த்தி விடும். ஒருநாள் போட்டிகளில் வேண்டுமானால் ஸ்பின்னர்களின் ஓவர்களில் குறைவாக ரன் சேர்த்து விட்டு, வேகப் பந்துவீச்சில் அதிக ரன்களை சேர்க்கலாம். ஆனால், டி20 போட்டிகளில் அதற்கான நேரம் இருக்காது.
2022 டி20 உலகக்கோப்பை முடிந்த பின் இந்த விவாதம் எழுந்தது. கோலி அதிக ரன் குவித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளது. அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் குறைவாக உள்ளதாக புகார் கூறப்பட்டது. அப்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால் தான் விராட் கோலி ஒரு ஆண்டாக டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்ததாக ஒரு பேச்சு உள்ளது. அதற்கேற்ப உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி உலகக்கோப்பை ஆகியவை அடுத்தடுத்து வந்ததால் கோலி விலகி இருந்தது பெரிய விஷயமாக மாறவில்லை.
தற்போது அவர் மீண்டும் 2௦24 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விரும்புகிறார். அது நடக்க வேண்டும் என்றால் அவர் ஸ்பின் பந்துவீச்சில் அதிரடியாக ரன் குவித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விராட் கோலி ஆட இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சுக்கு பெயர் போன அணி. தற்போது அந்த அணியில் அனுபவம் மிக்க முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருடன் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குவைஸ் அஹ்மத் அல்லது நூர் அஹ்மது ஆகியோர் இந்த டி20 தொடரில் பந்து வீச உள்ளனர். விராட் கோலி இவர்களை சமாளித்து ரன் குவித்தால் மட்டுமே 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் பங்கேற்க முடியும். இடையே ஐபிஎல் தொடரிலும் அவர் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிரான தன் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தியாக வேண்டும்.