ராய்ப்பூர்: இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா விளாசிய இமாலய சிக்சரால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் கோபத்தில் பவுலரை திட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 37 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, ஜித்தேஷ் சர்மா அதிக பரபரப்புடன் களமிறங்கினார். அந்த பரபரப்புக்கு ஏற்ப அதிரடியாக சிக்சர்களை விளாசிய் ஆச்சரியத்தை அளித்தார். கடந்த ஐபிஎல் சீசனிலேயே ஃபினிஷிங்கில் இறங்கி பொளந்து கட்டிய ஜித்தேஷ், மிகவும் முக்கியமான நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிலும் கிறிஸ் க்ரீன் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தில் இமாலய சிக்சர் ஒன்றை ஸ்கொயர் லெக் திசையில் விளாசி அசத்தினார். சுமார் 90 மீட்டர் தூரம் பறந்து சென்ற அந்த பந்து, ரசிகர்களின் அமர்ந்திருந்த கேலரியில் சென்று விழுந்தது. அந்த சிக்ஸ் அதிக உயரம் மற்றும் தூரம் சென்றதால், ஆஸ்திரேலிய அணி வீரர்களே மிரண்டு போனார்கள்.
அந்த சிக்சரை கடைசி வரை வேடிக்கை பார்த்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட், திடீரென கோபமடைந்து பவுலர் கிறிஸ் க்ரீனை கத்தினார். லெக் சைடில் பந்துவீச வேண்டாம் என்று அறிவுறுத்திய சென்ற நிலையில், உடனடியாக எக்ஸ்ரா கவரில் அபாரமாக ஒரு சிக்சரை மீண்டும் விளாசி தள்ளினார் ஜித்தேஷ் சர்மா. இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.
இந்திய அணிக்காக முன்னதாகவே அறிமுகமாகி இருந்தாலும், இந்திய மண்ணில் ஜித்தேஷ் சர்மா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். முதல் போட்டியிலேயே சிறப்பாக பேட்டிங் செய்ததோடு, ஃபினிஷிங் ரோலில் களமிறங்கி எதிரணிக்கு பயமளிக்கும் வகையில் ஆடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.