விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தன்னால் சிறப்பாக ஃபினிஷிங் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில், அந்த பந்தில் ரிங்கு சிங் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் அந்த பந்து நோ-பாலாக வீசியதால், அந்த ரன்கள் கணக்கிடப்படாமலேயே இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது.
எளிதாக பெற வேண்டிய வெற்றியை இந்திய அணி கடைசி நேரத்தில் சவாலாக்கி கொண்டது. வெற்றிக்கு 2 ரன்களே தேவை என்ற நிலையில், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இதனால் எந்த பதற்றமும் அடையாமல் ரிங்கு சிங் சாதாரணமாக நின்று ஆட்டத்தை சிறப்பாக ஃபினிஷ் செய்து அசத்தினார்.
இதுபோன்ற தருணங்களில் வழக்கமாக இந்திய அணி வீரர்கள் அதிக அழுத்தத்திற்குள் தங்களை தாங்களே தள்ளிக் கொள்வார்கள். ஆனால் ரிங்கு சிங் தேவையான நேரத்தில் பவுண்டரி என்று முதிர்ச்சியடைந்த வீரரை போல் செயல்பட்டு வருகிறார். என்ன தேவை என்பதை அறிந்து தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை கணிக்கிட்டு ஆடும் ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்க்கும் போது தோனி, பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களை பார்ப்பது போலவே உள்ளது.
இந்த வெற்றி குறித்து ரிங்கு சிங் பேசுகையில், பேட்டிங் செய்ய களமிறங்கும் போதே என்னால் ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். இந்திய அணிக்காக வெற்றிபெற வேண்டும் என்ற விரும்பினேன். கடைசி பந்தை எதிர்கொள்ளும் போது பதற்றமடையவில்லை. எல்லாம் சரியாக நடந்தது. இந்திய அணியின் வெற்றியில் பங்கு வகித்ததில் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.