விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த போதும், கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் ரிங்கு சிங் வெற்றிக்கு அழைத்து சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் இங்லிஸ் 110 ரன்கள் குவித்தார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், முதல் 2 பந்துகளிலேயே ரிங்கு சிங் 5 ரன்களை சேர்த்தார். இதன்பின் 4 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலை வந்த போது, அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். 5வது பந்தில் 2வது ரன் ஓடும் போது அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டானார்.
இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், அந்த பந்தில் ரிங்கு சிங் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் சிக்சர் விளாசினார். ஆனால் அந்த பந்து நோ-பாலானது. இதனால் 19.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்றது. எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிந்த போது எந்த தடுப்பாட்டமும் ஆடாமல் பதற்றம் கொள்ளாமல் ரிங்கு சிங் விளையாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியை கையில் எடுத்தார். அப்போது ரிங்கு சிங்கும் அதிரடியாக சிக்சர்களை விளாச முயற்சிக்காமல், எளிமையாக சில பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த போதும் எந்த பதற்றமும் கொள்ளாமல் தேவையான ரன் ரேட்டிற்கு ஏற்ப பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
ஃபினிஷர் ரோலில் தோனி களமிறங்கும் போது எப்படி பதற்றமில்லாமல் இருப்பாரோ, ரிங்கு சிங்கும் எந்த பதற்றத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து முடித்தார். இதனால் எதிர்காலத்தில் ரிங்கு சிங் ஃபினிஷிங் செய்வதில் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.