விசாகப்பட்டினம்: இந்திய அணியின் பேட்டிங்கின் போது கடைசி 5 ஓவர்களில் களமிறங்கிய ரிங்கு சிங், பதற்றத்துடன் விளையாடி கொண்டிருந்த தன்னையும் அமைதிபடுத்தியதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்லிஸ் 50 பந்துகளில் 110 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸ் உட்பட 80 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கே அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் ஒவ்வொருவரும் ஆஸ்திரேலியா அணியால் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால் அழுத்தத்தில் இருந்து எளிதாக மீண்டு வந்தோம். நிச்சயம் எனக்கு இது பெருமைமிக்க தருணம் தான். ஏனென்றால் கிரிக்கெட் ஆடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்கு விளையாடுவது தான் கனவாக இருக்கும். ஆனால் நான் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளது என் வாழ்வின் முக்கிய தருணம்.
மைதானத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பனிப்பொழிவு இல்லை. அதேபோல் இரண்டாவது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்று தெரியும். ஆஸ்திரேலியா அனி 230 முதல் 235 ரன்கள் விளாசுவார்காள் என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பவுலர்கள் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினார்கள். எங்கள் வீரர்களிடம் மகிழ்ச்சியாக கொண்டாட்டமாக விளையாடும்படி கேட்டுக்கொண்டேன். இதுபோன்ற தருணங்களை ஐபிஎல் தொடரின் போதே எதிர்கொண்டுள்ளோம்.
இஷான் கிஷனிடம் அதை தான் சொன்னேன். ஏனென்றால் நாங்கள் களத்தில் தொடர்ந்து இருந்தால் என்ன நடக்கும் என்பது தெரியும். பேட்டிங் செய்வதற்காக களமிறங்கும் போது கேப்டன் பதவியை ஓய்வறையிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவேன். முழு கவனமும் பேட்டிங்கில் தான் இருக்கும். அதேபோல் ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணமே அவருக்கானது தான். அவர் களமிறங்கிய பின் எந்த பயமோ பதற்றமோ இல்லை. என்னையும் சேர்த்து அமைதிபடுத்தியதாக தெரிவித்தார்.