விசாகப்பட்டினம்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராகுல் டிராவிட் பொறுப்பேற்று கொண்டார். அவருடன் 2 ஆண்டுகள் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பயிற்சியாளர் பொறுப்பில் ராகுல் டிராவிட் தொடர்வாரா அல்லது பதவி விலகுவாரா என்ற அவரிடமே கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் டிராவிட் பதிலளிக்கையில், வழக்கமாக நான் செய்து முடித்த பணியை ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ராகுல் டிராவிட் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தலைமை பயிற்சியாளர் பதவியில் செயல்பட விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது பிசிசிஐ தலைமை நிர்வாகிகளை சந்தித்து விவிஎஸ் லக்ஷ்மண் பேசியுள்ளதாகவும் பெயர் சொல்ல விரும்பாத பிசிசிஐ நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் ராகுல் டிராவிட்டின் இடத்தை அவரது நண்பரான விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு நிரப்ப பிசிசிஐ விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவை ஜெய் ஷாவே எடுப்பார் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ள ராகுல் டிராவிட், என்சிஏ தலைவாரக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் என்சிஏ இருப்பதால், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதோடு இளம் வீரர்களை தயார் செய்யும் வேலைகளையும் செய்ய முடியும் என்று ராகுல் டிராவிட் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விவிஎஸ் லக்ஷ்மண் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்-ம், ராகுல் டிராவிட் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணும் மாறவுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக நடைமுறைகளை பிசிசிஐ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இதனிடையே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடருக்கும் விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியுடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அவரின் செயல்பாடுகளை பார்த்த பின் பிசிசிஐ இறுதி முடிவை எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.