விசாகப்பட்டினம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், விசாகப்பட்டினத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி மொத்தமாக 11 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்குள் இந்திய அணி வீரர்கள் அணியாக இணைந்து தயாராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதன் முதல்படியாக 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. அதன் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மாலை தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா அணி மேத்யூ வேட் தலைமையிலும், இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. இதற்காக ஒரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உலகக்கோப்பை தோல்விக்கு குறைந்தபட்ச டி20 தொடரை வென்றாவது இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தின் வானிலை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகமடைய செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, விசாகப்பட்டினத்தில் 60 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் ஆட்டம் தொடங்குவதற்கு முன் காலை மற்றும் மதிய நேரங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், மாலைக்கு பின் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் நடக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைதான ஊழியர்கள் மழை வந்தால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.