விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த டி20 தொடருக்கு அயர்லாந்து மற்றும ஆசிய போட்டிகள் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேக அணியை பிசிசிஐ தரப்பில் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பு பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. இன்றைய போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரை இடது - வலது பேட்ஸ்மேன்கள் காம்பினேஷனில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார். அதேபோல் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அசத்தி சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
அதேபோல் இந்த மூவரில் இஷான் கிஷன் இதுவரை இந்திய அணிக்காக 29 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளார். உலகக்கோப்பை தொடரிலும் 2 போட்டிகளில் மட்டுமே அவர் ஆடியுள்ளதால், இந்த டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. அண்மை காலங்களில் இந்திய அணியுடன் அதிகமாக பயணம் செய்தாலும், குறைந்த அளவிலான வாய்ப்பே இஷான் கிஷனுக்கு கிடைத்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவது கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.