பெர்த்: ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விதிகளுக்கு புறம்பான வகையில் பந்து வீசி கீழ்த்தரமாக நடந்து கொண்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சனம் செய்து இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுவது புதியது அல்ல. ஆனால், அதை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரே விமர்சனம் செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் அன்று இந்திய அணி விரைவாக ரன் சேர்த்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களும், ஆஸ்திரேலியாவின் 104 ரன்களும் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக ரன் சேர்த்தது.

துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே எல் ராகுல் 77 ரன்களும் எடுத்தனர். அதன் பின் விராட் கோலி நிலையாக நின்று ஆடி வந்தார். எட்டாம் வரிசையில் வந்த நிதிஷ் குமார் ரெட்டி அவருடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதனால் இந்திய அணியின் ஸ்கோர் 400 நன்களை தாண்டி வேகமாக உயர்ந்தது.
அதனால் எரிச்சல் அடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும், விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில் அவரை சதம் அடிக்க விடாமல் வெறுப்பேற்ற முடிவு செய்தனர். அதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், பகுதி நேர பந்துவீச்சாளர் மார்னஸ் லாபுஷேனை பந்து வீச அழைத்தார்.
அவர் வேண்டுமென்றே நெகட்டிவ் லைனில் பந்து வீசினார். அதாவது லெக் சைடு ஸ்டம்ப்புக்கு வைடாக வீசினார். பேட்ஸ்மேன் உடைய பேட் எப்போதும் ஆஃப் சைடில் இருக்கும். எனவே, ஒரு பேட்ஸ்மேனுக்கு லெக் சைடு ஸ்டம்ப் முதல் ஆஃப் சைடு வைடு லைன் வரை பந்து வீசுவது விதிகளுக்கு உட்பட்டதாகும்.
எனினும், டெஸ்ட் போட்டிகளில் லெக் சைடில் பந்து வீசினாலும் அது வைடு என கருதப்படாது. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் வேண்டுமென்றே பந்தை முழுமையாக லெக் சைடு செல்லும் வகையில், அதே லைனில் நேராக பந்து வீசுவது விதிகளுக்கு முரண் ஆனதாகும்.
இப்படி வீசினால் அம்பயர்கள் எச்சரிக்கை செய்வார்கள். தொடர்ந்து இதே போல வீசினால் அதை வைடு என அறிவிப்பார்கள். இதுபோல லெக் சைடு வைடாக பந்து வீசினால் அதை அடித்து ஆடுவது பேட்ஸ்மன்களுக்கு சிரமமாக இருக்கும். மார்னஸ் லாபுஷன் இதே வேலையை தான் செய்தார். அப்போது அம்பயர் இரண்டு முறை அவரை எச்சரித்தார்.
மீண்டும் இதே வேலையை மார்னஸ் செய்தபோது அம்பயர் வைடு என அறிவித்தார். விராட் கோலி அப்போது 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்னஸ் லாபுஷேன் தொடர்ந்து இவ்வாறு லெக் சைடு லைனில் வீசினார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
"ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற மோசமான உத்திகளை பயன்படுத்தி பார்த்து இருக்கிறீர்களா? நெகட்டிவ் லைனில் விதிகளுக்கு முரணாக இந்த உத்திகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்." என்று விமர்சித்தார். சமூக வலைதளங்களிலும் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன.