பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது தேவ்தத் படிக்கல் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருந்தார் தேவ்தத் படிக்கல்.
அனுபவம் இல்லாத அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட வைத்தது பலருக்கும் சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் அவர் இந்தப் போட்டியில் 23 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

23 பந்துகளாக ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் திணறிய தேவ்தத் படிக்கல் கடைசியில் ஜோஷ் ஹேசல்வுட் வீசிய 11 வது ஓவரின் கடைசி பந்தில் பந்தை எட்ஜ் செய்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதை அடுத்து இந்திய அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது.
அடுத்து வந்த விராட் கோலி 12 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கே எல் ராகுல் 26 ரன்கள் எடுத்து மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்திய அணி உணவு இடைவேளையின் போது 25 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்து இருந்தது. ரிஷப் பண்ட், துருவ் ஜுரல் களத்தில் இருந்தனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. பெர்த் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற நிலையில் இரண்டாவது நாள் முதல் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்ற அடிப்படையில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து இருந்தது.
ஆனால், ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிக பவுன்ஸ் உடன் பந்துகளை வீசி இந்திய அணியை அச்சுறுத்தியது.