பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் விக்கெட்டால் பெரிய சர்ச்சை வெடித்தது. பந்து அவரது காலில் கட்டி இருந்த பேடில் (Pad) பட்டு விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் ஆனது. அப்போது களத்தில் நின்று இருந்த அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ செய்தது. ரிவ்யூவில் பந்து பேட்டை தாண்டும் போது "ஸ்னிக்கோமீட்டரில்" (Snickometer) லேசான அதிர்வு இருந்தது. ஆனால், அதே சமயம் பேட் பேடில் (Pad) பட்டது. அதனால் அந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அதை சரியாக பார்க்காமல் மூன்றாவது அம்பயர் அவசர, அவசரமாக அவுட் கொடுத்தார்.

அதனால் கே எல் ராகுல் அதிர்ச்சி அடைந்தார். பந்து பேட்டில் படவில்லை என்பதில் உறுதியாக இருந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காட்டப்பட்ட ரீப்ளே-வில் பந்துக்கும், பேட்டுக்கும் இடையே சில இன்ச் இடைவெளி இருக்கும்போதுதான் ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வு இருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து பந்து பேட்டில் படவில்லை, மாறாக காலில் கட்டி இருந்த பேடில் பட்டதால் தான் அதிர்வு ஏற்பட்டது என்பது பார்வையாளர்களுக்கு தெரிய வந்தது. எனினும், அதை மூன்றாவது அம்பயர் சரியாக பார்க்காமல் அவுட் கொடுத்துவிட்டார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி மற்றும் அம்பயர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதில் ஏமாற்று வேலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அம்பயரின் தவறான முடிவு இந்திய அணியை வெகுவாக பாதித்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த அனுபவ வீரர் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது கே எல் ராகுல் மட்டுமே ஆஸ்திரேலிய அணியின் அச்சுறுத்தலான பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்த்து வந்தார். அவர் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.