பெர்த்: ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் ஆடிய ஆட்டம், ராகுல் டிராவிட், புஜாரா போன்ற நிதானமான டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை மிஞ்சும் அளவுக்கு இருந்தது. அவர் 52 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது ஆட்டம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடியதை அடுத்து இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணி எளிதாக ரன் குவிக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்திய அணியை விட மோசமாக ஆடியது ஆஸ்திரேலியா. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டம் இழந்து சென்றனர்.
பல ஆஸ்திரேலிய வீரர்களால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. மூன்றாம் வரிசை வீரரான மார்னஸ் லாபுஷேன் மட்டுமே நீண்ட நேரம் களத்தில் தாக்குப் பிடித்து நின்றார். முகமது சிராஜ் வீசிய சில பவுன்சர் பந்துகள் அவரது உடலை கடுமையாக தாக்கியது. அதையும் சமாளித்து அவர் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நின்றார்.
ஆனால், அவர் ரன் குவிக்க முடியாமல் திணறினார். 52 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 3.84 என்பதாக இருந்தது. தனது கிரிக்கெட் வாழ்வில் 50 பந்துகளை சந்தித்த பின் மிகக் குறைவான ரன் எடுத்து ஆட்டம் இழந்தார் மார்னஸ் லாபுஷேன்.
முன்னதாக 2023 ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார். அந்த மோசமான சாதனையை தற்போது முறியடித்து இருக்கும் அவர், இந்திய அணிக்கு எதிராக 52 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார்.
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் இதுபோல பல போட்டிகளில் நீண்ட நேரம் ரன் எடுக்காமல் எதிரணி பந்து வீச்சாளர்களை சோதித்து இருக்கிறார். அவருக்கு அடுத்து புஜாரா அந்த பணியை செவ்வனே செய்தார். இந்திய அணியில் அவர்களுக்கு அடுத்த அது போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுஷேன் எதிரணி பவுலர்களை சோதிக்கும் வீரராக மாறி இருக்கிறார்.