ஆஸி.யுடன் இன்று இந்தியா 5வது போட்டி... கோப்பையை வென்று சாதிக்குமா...? சரணடையுமா..?
டெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றன.
ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இந்தியா எளிதாக தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... ராஞ்சி, மொகாலியில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்
அந்த போட்டிகளில் கேப்டன் விராத் கோலி, ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தும் தோல்வியைத் தழுவ நேரிட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, மொகாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் 95 ரன், தவான் 143 ரன் விளாசியது.

தோல்விக்கு காரணம்
பந்துவீசும்போது பனிப்பொழிவு காரணமாக இந்திய பவுலர்கள் தடுமாற நேரிட்டதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்க தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

இறுதி போட்டி
ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இது என்பதால், இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் கோலி படை களமிறங்குகிறது.

நெருக்கடி
தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது ரிஷப் பண்ட் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.கடந்த போட்டியில் அவர் ஸ்டம்பிங் உட்பட பல வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

அனல் பறக்கும் ஆட்டம்
டெல்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குல்தீப், சாஹலுடன் ஜடேஜாவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் தொடரை வெல்ல வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


Click it and Unblock the Notifications