
ஆடுகளம்
இரண்டாவது போட்டி நடந்த நாக்பூர் மைதானத்தின் ஆடுகளம் வெடிப்புகளுடன் இருந்தது. அதனால், சுழற் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்ப, ஆஸ்திரேலிய அணி வீரர்களை தேர்வு செய்தது.

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்
ஆடம் சாம்பா மற்றும் நாதன் லியோன் என இரண்டு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான மாக்ஸ்வெல் என மூன்று வீரர்களை அணியில் வைத்திருந்தது. இந்திய அணியும் ஜடேஜா, குல்தீப், ஜாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் கொண்டே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாதி
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போதே, இது தவறான முடிவு என கூறப்பட்டது. காரணம், இரண்டாம் பாதியில் ஆடுகளத்தில் வெடிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பதே!

சொதப்பல் முடிவு
இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு கூடுதல் வெடிப்புகள் சாதகமாக அமையும். கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரின் கணிப்பும் இதுவே. எனினும், ஆஸ்திரேலியா டாஸ் வென்றும் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்து சொதப்பியது.

ஆஸி. சுழற் பந்துவீச்சு எப்படி?
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் குவித்தது. அதே சமயம், ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சாளர் தனியாக 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

முதல் 25 ஓவர்கள்
அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்த போது முதல் 25 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து வெற்றியை நோக்கி முன்னேறி வந்தது. எனினும், அடுத்த சில ஓவர்களில் அந்த அணியால் சுழற் பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தோல்வி அடைந்தது
இதனால், கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்த அந்த அணி கடைசி ஓவரில் போராடி தோற்றது. 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தவறான முடிவு
இந்திய அணி சேஸிங்கில் பலம் வாய்ந்த அணி என நினைத்து ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம். ஆனால், அதுவே அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.


Click it and Unblock the Notifications











