அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரில் நீடிக்க வேண்டுமானால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. மறுபுறம், சொந்த மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். முதல் போட்டியில் கிடைத்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இரண்டாவது போட்டியிலேயே தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைப்பது மிகச் சிறப்பானது. அணியில் அலெக்ஸ் கேரி மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்போம். இருந்தாலும், முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி. இன்று வானிலை நன்றாக இருக்கிறது, எனவே மழை குறுக்கீடுகள் இருக்காது என நம்புகிறேன். முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து, பின்னர் இரவு நேரத்தில் விளக்கொளியில் பந்துவீசும்போது ஸ்விங் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறோம்," என்று தெரிவித்தார்.
இந்திய அணி (ஆடும் லெவன்): ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி (ஆடும் லெவன்): மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கூப்பர் கொன்னோலி, மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இந்தியாவின் இன்னிங்ஸை ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை மிட்செல் ஸ்டார்க் தொடங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். அடிலெய்டு மைதானத்தில் 2008ஆம் ஆண்டிலிருந்து தோல்வியைச் சந்திக்காத வரலாற்றுச் சாதனையுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. இந்தச் சாதனை தொடருமா அல்லது ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.