2வது ஒருநாள் போட்டி: குல்தீப் அபார ஹாட்ரிக்-ஆஸி.யை 50ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி
கொல்கத்தா: 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்டமாக கேப்டன் கோஹ்லி 92, ரஹானே 55, கேதர் ஜாதவ் 24 ரன்கள் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட டோணி 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரிச்சர்ட்சன் பந்தில், ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முன்னதாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, கல்டர் நைல் வீசிய இன்ஸ்விங்கிங் பந்து வீச்சில் பௌல்ட் ஆனார். கோஹ்லி களத்தில் நிற்கும்வரை இந்தியா 300 ரன்களை கடக்கும் வாய்ப்பை பெற்றிருந்தது.

இந்தியா 252 ரன்கள்
ஆனால் லோவர் மிடில் ஆர்டரில் எதிர்பார்க்கப்பட்ட டோணி, மணிஷ் பாண்டே ஏமாற்றியதாலும், பாண்ட்யா 20 ரன்கள்தான் எடுத்ததாலும் இந்தியா 252 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

3 விக்கெட்டுகள்
பும்ரா மட்டும் 10 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். நைல் மற்றும் ரிச்சர்ட்சன் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்டன் அகர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

குல்தீப் ஹாட்ரிக்
பின்னர் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இந்தியாவின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். 43.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 202 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications