திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மேத்யூ வேட் பேசுகையில், பனிப்பொழிவு வரும் என்று நினைக்கிறேன். நிச்ச்சயம் ஆடுகளத்தை பார்த்த பின், அதன் தயாரிப்பாளருடன் சில வார்த்தைகள் பேசினோம். முதல் போட்டியில் சிறப்பாகவே விளையாடினோம்.
எங்களை விடவும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆரோன் ஹார்டி மற்றும் பெஹரண்டார்ஃப் ஆகியோருக்கு பதிலாக மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பவா இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்களும் சேஸிங் செய்யவே விரும்பினோம்.
ஏனென்றால் நேற்றிரவு எவ்வளவு பனிப்பொழிவு வந்தது என்று பார்த்துள்ளோம். முதல் பேட்டிங் செய்வது இந்திய அணி வீரர்களுக்கு சவாலானது தான். நிச்சயம் டிஃபெண்ட் செய்யும் அளவிற்காக பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கடந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் கொடுத்துள்ளது. கேப்டன்சியை பொறுத்தவரை எனக்கு புதிய சவால் மற்றும் பொறுப்பாகும். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற முடியும். இதனால் வெற்றிக்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக போராடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும், போட்டியின் போது மழை பெய்ய வாய்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.