அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் மூன்று முறை அணைந்தன. அதனால் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா கடும் அதிருப்தி அடைந்தார்.
மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்களை நிர்வகித்து வரும் நாடு என்ற பெருமையை கொண்ட ஆஸ்திரேலியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் மூன்று முறை மின்விளக்குகள் அணைந்தது விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி எப்போதும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் ஆர்வமாக உள்ளது.

ஆனால், அதற்கான சரியான முன்னேற்பாடுகளை செய்யவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணி ஒரு விக்கெட் இழந்து ஆடி வந்த நிலையில் 18 வது ஓவரின் இரண்டாவது பந்தின் போது மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் அணைந்தன. அதனால் மைதானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அப்போது பந்து வீச ஓடி வந்து கொண்டிருந்தார். அதனால், அவர் பாதியில் நிற்க வேண்டியதானது. அதன் பின் மீண்டும் அதே ஓவரின் நான்காவது பந்தின் முடிவில் மீண்டும் மின் விளக்குகள் அணைந்தன. அப்போது ஹர்ஷித் ராணா மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து மின்விளக்குகள் அணைவது குறித்து கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
IND vs AUS: ஆஸ்திரேலியா செய்த மெகா தவறு.. கூடுதலாக 50 ரன்கள் எடுத்த இந்திய அணி.. என்ன நடந்தது?
பின்னர் சில ஓவர்கள் கழித்து மூன்றாவது முறையாக மின் விளக்குகள் அணைந்தன. அடிலெய்டு மைதானம் மின்சார கட்டணம் செலுத்தவில்லையா? என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்க் வாஹ் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.