அடிலெய்டு: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது. ஜோஷ் ஹேசல்வுட்-க்கு பதிலாக இரண்டு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஸீன் அபாட், பிரெண்டன் டாகெட் ஆகிய இருவர் அணியில் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 அன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருப்பவர் ஜோஷ் ஹேசல்வுட்.
மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் போன்ற மற்ற வேகப் பந்துவீச்சாளர்களை காட்டிலும் இந்திய அணியை அதிகமாக அச்சுறுத்தி வருவது ஜோஷ் ஹேசல்வுட் தான். இவரது துல்லியமான பந்துவீச்சின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் திணறினர்.
ஜோஷ் ஹேசல்வுட் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்பதே அதற்கு உதாரணம். அந்த வகையில், பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஜோஷ் ஹேசல்வுட் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்காட் போலான்ட், ஜோஷ் ஹேசல்வுட்-க்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. ஸீன் அபாட் மற்றும் பிரெண்டன் டாகெட் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் கூடுதல் வீரர்கள் ஆக மட்டுமே அணியில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
ஜோஷ் ஹேசல்வுட் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு திரும்புவாரா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. அவருக்கு இடது தொடையில் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.