அடிலெய்டு: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் முகமது ஷமி இடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் வாக்குவாதம் எழுந்ததாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு பின் முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

அப்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்கான உடற்கிறன் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதேசமயம் பெங்களூருவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்தப் போட்டி முடிந்த பின் கேப்டன் ரோஹித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று இருந்தார்.
அப்போது முகமது ஷமிக்கும், ரோஹித் சர்மாக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய அணியில் பங்கேற்பாரா? என பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளிக்கையில், "முகமது ஷமிக்கு முழங்காலில் வீக்கம் உள்ளது. அவர் 100 சதவிகிதம் தயாராக இருந்து தயாராகும் நிலையில் இருந்தார். ஆனால், இப்போது மீண்டும் முழங்காலில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் முதலில் இருந்து உடல் திறனை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்." என்றார் ரோஹித் சர்மா.
இவ்வாறு ரோஹித் சர்மா பேசி இருந்த நிலையில் அன்றைய தினமே முகமது ஷமி பந்து வீசும் வீடியோவை வெளியிட்டு அதற்கு பதிலடி கொடுத்து இருந்தார். இந்த நிலையில், போட்டி முடிந்த உடன் ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற போது அங்கு முகமது ஷமி, ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது பற்றி காட்டமாக கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு ரோஹித் சர்மா கோபமாக பதில் அளித்ததாகவும் வட இந்திய ஊடகமான டைனிக் ஜாக்ரனில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மை என்றால் முகமது ஷமிக்கு எதிராக ரோஹித் சர்மா செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மீண்டும் முகமது ஷமிக்கு முழங்காலில் வீக்கம் இருப்பதாக ரோஹித் சர்மா கூறி இருந்தார்.
ஆனால், முகமது ஷமி நேற்று இந்திய அளவிலான டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். மேலும், பேட்டிங்கில் அதிரடியாக ரன் சேர்த்து இருந்தார். இதன் மூலம், ரோஹித் சர்மா சொன்னது உண்மைதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.