அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது இந்திய அணிக்கு சாதகமான முடிவாக கருதப்படுகிறது.
அடிலெய்டு மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. பிங்க் நிற பந்து இந்த போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியின் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் துவங்கி இரவு வரை நடைபெறும் என்பதால் வெவ்வேறு சூழ்நிலையில் ஆட வேண்டி இருக்கும்.

குறிப்பாக சூரியன் மறையும் நேரத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருக்கும். எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருப்பதன் மூலம் மாலை வேளையில் விரைவாக ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைக்க முடியும். அதே போல போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் சேஸிங் செய்வதும் கடினமாக இருக்கும் என்பதால் டாஸ் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என கருதப்படுகிறது. இந்தப் போட்டிக்கான பிட்ச் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரி சமமாக ஒத்துழைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. எனவே, டாஸ் முடிவு தவறாக செல்ல வாய்ப்பு இல்லை.
அதே சமயம், பிட்ச்சில் புற்கள் இருப்பதால் முதல் நாள் அன்று முதல் 20 ஓவர்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்காமல் பொறுமை காத்து ஆடுவது அவசியம் ஆகும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. காயத்தால் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்காட் போலான்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.