இந்திய அணிக்கு எதிராக எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை செய்த உலகக்கோப்பை நாயகன் ட்ராவிஸ் ஹெட்
அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனை ஒன்றை செய்து இருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட். இந்திய அணிக்கு எதிராக மூன்று விதமான பந்துகள் பயன்படுத்தப்படும் வெவ்வேறு போட்டிகளில் சதம் அடித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்று இருக்கிறார்.
இது போன்ற சாதனையை எந்த ஒரு பேட்ஸ்மனும் இந்திய அணிக்கு எதிராக செய்ததில்லை. ட்ராவிஸ் ஹெட்டை எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் உலகக் கோப்பை கனவை கலைத்தவர் அவர்தான்.

அந்த போட்டியில் அவர் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் வென்று இருந்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளைப் பந்தில் அவர் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார்.
அதற்கு முன்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். அதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்தில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார்.
அடுத்ததாக தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் சதம் அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து, சிவப்பு பந்து மற்றும் பிங்க் நிற பந்து என மூன்று விதமான பந்துகளில் சதம் அடித்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்று இருக்கிறார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்தது. அதில் ட்ராவிஸ் ஹெட் மட்டும் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து ஆடிய இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் என்ற மிகச் சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை 3.2 ஓவரில் ஆஸ்திரேலியா எட்டி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications