அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அது ஏன்? என இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நடந்த சோக சம்பவம் தான் அதற்கு காரணம்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஃபிலிப் ஹியூஸ் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரின் போட்டி ஒன்றின் போது பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்து இருந்தார். அவரது பத்தாவது ஆண்டு மறைவுக்கு நினைவு கூறும் விதமாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடி வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு, நவம்பர் 27 அன்று ஃபிலிப் ஹியூஸ் தலையில் பவுன்சர் பந்து தாக்கியது. அவர் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் காப்பாற்ற முடியவில்லை. அது ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அதனால் சோகமடைந்து இருந்தனர்.
அந்த சம்பவத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பவுன்சர் பந்துகளுக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல ஒரு கிரிக்கெட் வீரரின் தலையில் பந்து தாக்கினால் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய விதிமுறைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஃபிலிப் ஹியூஸ் மறைந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்த போட்டி துவங்கும் முன்பு ஃபிலிப் ஹியூஸ் தொடர்பான சிறிய ஆவணப் படம் ஒன்றையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர்.