பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என திட்டமிட்டு மிகப்பெரிய சொதப்பலை செய்தது. அந்த அணி விக்கெட்களை இழந்த வேகத்தை பார்த்து இந்திய வீரர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் அன்று 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஒன்றரை நாள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.

ஐந்தாம் நாளின் துவக்கத்தில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது இந்திய அணி. கடைசி நாளில் இரண்டு பகுதி ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது ஆஸ்திரேலிய அணி. விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்த ஆஸ்திரேலிய அணி அதற்காக முயற்சி செய்தது.
ஆனால், 33 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. பின்னர் ட்ராவிஸ் ஹெட் 17 ரன்களும், அலெக்ஸ் கேரி 19 ரன்களும், கம்மின்ஸ் 22 ரன்களையும் எடுத்ததை அடுத்து 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது ஆஸ்திரேலியா. அப்போது அந்த அணி டிக்ளர் செய்தது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்கள், பும்ரா 3 விக்கெட்கள, முகமது சிராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா 33 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்ததால் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்க முடியாமல் போனது. 89 ரன்களுக்கு டிக்ளர் செய்தது மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற நிலையில் 300 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றால் 115 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இப்போது இந்திய அணிக்கு 275 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 53 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்த இலக்கை இந்திய அணி எட்ட வேண்டும் என்றால் ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
இந்திய அணி 2.1 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் மழை குறுக்கிட்டது. அதிகமாக மழை பெய்ததால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.