பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் மூன்று முறை மழை குறுக்கிட்டது. அதனால், இந்திய அணியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. இந்திய அணி விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே இந்த போட்டியில் தடுமாறி ரன் சேர்த்து ஃபாலோ ஆன் சிக்கலில் இருந்து தப்பியது.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாள் மற்றும் மூன்றாம் நாளின் முதல் பாதி வரை முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.

நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் அன்று இந்திய அணி பேட்டிங்கில் தாக்குப் பிடித்து ஆடுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் துவங்கியது. ராகுல் மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங் செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆஸ்திரேலிய அணி 31 வது ஓவர் வீசிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதை அடுத்து ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது.
ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் சென்ற பின் நிதிஷ் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து ஆடினர். 49 வது ஓவரின் முடிவில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
அப்போது ஆட்டத்தின் உணவு இடைவேளையும் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின் மழை நின்றது. அதன் பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா அரைசதம் கடந்தார்.
உணவு இடைவேளைக்கு பின் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 51.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் மூன்றாவது முறையாக தடைபட்டது. அப்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா? என்ற தவிப்பு இருந்தது. இதனிடையே நிதிஷ் குமார், சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தனர். ஜடேஜா வெளியேறிய போது 77 ரன்கள் சேர்த்து இருந்தார். பின்னர் ஃபாலோ ஆனை தவிர்க்க 33 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா அபாரமாக ஆடி இந்திய அணியை மீட்டனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து இருந்தது. ஆஸ்திரேலிய அணியை விட 193 ரன்கள் பின் தங்கி உள்ளது. ஐந்தாம் நாள் அன்றும் மழையால் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதால் இந்தப் போட்டி டிராவை நோக்கி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.