பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இது மிகவும் தவறான முடிவு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று உள்ளன. இந்த நிலையில் மூன்றாவது போட்டி காபா மைதானத்தில் துவங்கியது.

2021 ஆம் ஆண்டு காபா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. எனவே, இந்த முறையும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்து வீசிய அணியே வெற்றி பெற்று இருக்கிறது.
அந்த புள்ளிவிவரத்தை அடிப்படையாக வைத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும், மழை பெய்ய வாய்ப்பு இருந்ததாலும், மேக மூட்டமான சூழ்நிலை இருந்ததாலும் அதுவும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என அவர் நினைத்தார்.
எனினும், இது தவறான முடிவு என மைக்கேல் வாகன் சுட்டிக்காட்டி விமர்சித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் நிகழ்வின்போது தானும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பேன் என கூறி இருந்தார். அது பற்றி பேசிய மைக்கேல் வாகன், "இந்தப் போட்டியின் முடிவில் பாட் கம்மின்ஸ் அனைத்து மகிழ்ச்சி அடைவார்" எனக் கூறினார்.
ஏனெனில், பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பார். அது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்து இருக்கும் என்பதை இவ்வாறு மைக்கேல் வாகன் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்திய அணி முதலில் பந்து வீசிய நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் 13.2
ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தது. ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி எடுத்த டாஸ் முடிவு சரியானதா? இல்லையா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.