பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே உள்ளது. இந்த நிலையில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் உள்ளூர் தொடரில் விளையாட உள்ளது உறுதியாகி இருக்கிறது.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு இணையாகவோ, அவருக்கு உதவி செய்யும் வகையிலோ பந்து வீச இந்திய அணியில் வேறு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் இல்லாத நிலையே உள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகிய இருவரும் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் முகமது ஷமியை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர் சமீபத்தில் ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடரிலும், சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடி, உள்ளூர் அளவில் தனது ஃபார்மையும், உடல் திறனையும் நிரூபித்து இருந்தார்.
இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்றாவது அல்லது நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக முகமது ஷமி அடுத்து நடைபெற உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் பெங்கால் மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதன் மூலம், அவர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்க போவது உறுதியாகி இருக்கிறது. அப்படி என்றால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார். பிசிசிஐ அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்ற முடிவு எடுத்ததாலேயே பெங்கால் அணி அவரை இந்த தொடருக்கான அணியில் தேர்வு செய்து இருப்பதாக கருதப்படுகிறது.