பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டிக்ளர் செய்யாமல் கடைசி விக்கெட் விழும் வரை பதற்றத்திலேயே இருந்தார். அதற்கு காரணம் இந்திய அணி இல்லை. மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சம்பவம் தான் இந்த பதற்றத்துக்கு காரணம்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. போட்டியின் ஐந்தாம் நாள் வரை கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எட்டிய நிலையில் டிக்ளர் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கூட அதைத்தான் சொல்லி வந்தனர். ஆனாலும், கடைசி விக்கெட் போகும் வரை டிக்ளர் செய்யாமல் இருந்தார் கம்மின்ஸ். இதன் பின்னணியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருப்பது தான் இதில் ஆச்சரியமான விஷயம். இந்த ஆண்டின் துவக்கத்தில் இதே பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடியிருந்தது.
அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிட்ட கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் டிக்ளர் செய்தார். அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து அடி ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கம்மின்ஸ் 64 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவர் நன்கு ரன்கள் குவித்து வந்த நிலையில், கடைசி விக்கெட் போகும் வரை அவர் ஆடி இருக்கலாம்.
ஆனால், 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் அவர் டிக்ளர் செய்தார். அதன் மூலம், இரண்டாம் நாளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய வைத்து விக்கெட்களை வீழ்த்தலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் 193 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
ஆனால், ஆஸ்திரேலியா அணி 207 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் கேப்டன் கம்மின்ஸ் டிக்ளர் செய்தது அப்போது மிகப்பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த காரணத்தால் தான் அதே மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் டிக்ளர் செய்யாமல் திணறினார்.
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மழை பெய்யும் என்பதால் இந்த போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்பு உள்ளதாக பலரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியா 400 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்து இந்தியாவை உடனடியாக பேட்டிங் செய்ய அழைத்து விரைவாக விக்கெட் வீழ்த்துவதை திட்டமாக கொண்டு இருக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அலெக்ஸ் கேரி அதிரடியாக ரன் சேர்த்து களத்தில் இருந்ததால் கம்மின்ஸ் டிக்ளர் செய்யாமல் கடைசி விக்கெட் விழும் வரை காத்திருந்தார். இடையே மழை பெய்ததால் அவர் பதற்றம் அடைந்தார். அலெக்ஸ் கேரி 70 ரன்கள் எடுத்து நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு இது சவாலான ஸ்கோர் என்றாலும், இந்த போட்டியின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய அணி போட்டியை டிரா செய்ய முயற்சிக்கலாம்.