பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம் கடந்த 39 ஆண்டுகளில் எந்த எதிரணி கேப்டனும் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் எடுக்காத முடிவை எடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் கடைசியாக 1985 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. அதன் பின் 39 ஆண்டுகள் கழித்து ரோஹித் சர்மா அதே காபா மைதானத்தில் டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், நான்காவது இன்னிங்ஸில் சேசிங் செய்வது எப்போதுமே கடினமான ஒன்றாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி முன்னிலை பெறாமல் போனால், அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் பெரிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டி இருக்கும்.
எப்போதுமே ஒரு டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் பேட்டிங்கையே தேர்வு செய்வார்கள். ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற உடன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் நடந்த கடைசி ஐந்து பகல் நேர டெஸ்ட் போட்டிகளில் முதலில் பவுலிங் செய்த அணியே வெற்றி பெற்று உள்ளது. அந்த புள்ளிவிவரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் பவுலிங் தேர்வு செய்து இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
அதே சமயம், இந்த முடிவு விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. ஏனெனில், தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் போட்டி நடக்க உள்ள ஐந்து நாட்களில் முதல் நான்கு நாட்கள் மழையால் பாதிக்கப்படும் என வானிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்வது சரியானதாக இருக்கும் என விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.