நான்கு மாற்றங்கள்
நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. அம்பதி ராயுடு, தோனி, ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு பதில், ராகுல், ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார், சாஹல் அணியில் இடம் பெற்றனர்.
இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித், தவான் அதிரடி துவக்கம் அளித்தனர். ரோஹித் 95, தவான் 143 ரன்கள் குவித்தனர். இவர்கள் இருவரும் முந்தைய போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில், மொஹாலியில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். பல சாதனைகளை முறியடித்தனர்.
கோலி, ஜாதவ் ஏமாற்றம்
ரிஷப் பண்ட் 36, ராகுல் 26, விஜய் ஷங்கர் 26 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். கோலி 7, ஜாதவ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர். கடைசி நேரத்தில் புவனேஸ்வர் குமார் 1, சாஹல் 0 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பும்ரா அசத்தல்
எதிர்பாராத நிலையில் கடைசி பந்தை மட்டுமே சந்தித்த பும்ரா அந்த பந்தில் சிக்ஸ் அடித்து ஆச்சரியம் அளித்தார். அதைப் பார்த்து கேப்டன் கோலி எகிறி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பும்ராவின் கடைசி பந்து சிக்ஸ், தவான், ரோஹித் சாதனை ஆட்டம் எல்லாமே வீண் தான் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
ஆஸி. சுமார் பந்துவீச்சு
ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்டது. அதற்கு ஆடுகளமும் ஒரு காரணம். பாட் கம்மின்ஸ் 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்தாலும், 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன் 3, சாம்பா 1 விக்கெட் வீழ்த்தினர்.
மோசமான துவக்கம்
ஆஸி. அணி மிக மோசமான துவக்கம் பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 0, மூன்றாவது பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 3.3 ஓவர்களில் 12 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது ஆஸி.
ஹேண்ட்ஸ்கோம்ப் - கவாஜா இணை
அடுத்து கூட்டணி சேர்ந்த கவாஜா - ஹேண்ட்ஸ்கோம்ப் நிதான ஆட்டம் ஆடினர். ஆஸி. அணி 32 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து இருந்தது.அப்போது ரன் விகிதம் ஓவருக்கு 5.78 என இருந்தது. அதன் பின் அதிரடி காட்டத் துவங்கியது இந்த இணை.
சரிந்த விக்கெட்கள்
அதன் பின் ஆஸ்திரேலிய வேகம் எடுத்தாலும், விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தது. கவாஜா 91, ஹேண்ட்ஸ்கோம்ப் 117, மாக்ஸ்வெல் 23, அலெக்ஸ் கேரி 21 என வெளியேறினர். கவாஜா தவிர்த்து அனைவரும் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டர்னர் தான் போட்டியை மொத்தமாக வெற்றிப் பாதையில் மாற்றினார்.
போட்டியை மாற்றிய டர்னர்
கடைசி 10 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது ஆஸி. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த டர்னர், ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து வந்தார். பின்னர், 6 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலை.
அந்த மூன்று ஓவர்கள்
45, 46 மற்றும் 47வது ஓவர்களில் புவனேஸ்வர் குமார் 2 ஓவர்கள், பும்ரா 1 ஓவர் பந்து வீசினர். அந்த ஓவர்களில் டர்னர் 4 சிக்ஸர்கள், 2 ஃபோர் அடித்தார். கேரி 2 ஃபோர் அடித்தார். 45வது ஓவரில் 20 ரன்கள், 46வது ஓவரில் 16 ரன்கள், 47வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தது ஆஸி.
ஆஸி. சூப்பர் வெற்றி
இறுதியில் இமாலய இலக்கான 359 ரன்களை, 47.5 ஓவர்களில் எட்டியது ஆஸ்திரேலியா. இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என ஆஸ்திரேலியா சம நிலையை எட்டியுள்ளது. இதனால், ஐந்தாவது போட்டி இறுதிப் போட்டியாக மாறியுள்ளது. அதில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும்.