ராய்ப்பூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் போது தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி இந்திய அணிக்காக ரன் குவிக்கிறேன் எனக் கூறி இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
மேலும், தோனி டி20 போட்டிகளின் போது வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால், அந்த தவறை செய்யக் கூடாது என கூறியதாகவும் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார். இந்த தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி 213 ரன்கள் குவித்துள்ளார் ருதுராஜ். ஒரு சதமும் அடித்துள்ளார்.

ருதுராஜ் முதலில் நிதான ஆட்டம் ஆடத் துவங்கி பின்னர் அதிரடியாக ரன் சேர்க்கிறார். அதனால் முதல் சில ஓவர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ் இருக்கும். ஆனால், அதன் பின் ஸ்ட்ரைக் ரேட் உயரத் துவங்கும். நான்காவது போட்டியில் கூட 20 பந்துகள் வரை அவர் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ் இருந்தது. இந்திய அணி விக்கெட்களை இழந்ததால் அவர் மேலும் நிதானமாக ஆடினார். ஆனால், இறுதியில் 28 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
தனது ஆட்டம் குறித்து போட்டிக்கு பின் பேசிய அவர், "சிஎஸ்கேயில் இருந்து இதை நான் கற்றுக்கொண்டேன், மஹி பாய் எப்போதும் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதிலும், விளையாட்டைப் புரிந்துகொள்வதிலும், ஆட்டம் எவ்வாறு முன்னேறும் என்பதைப் புரிந்துகொள்வதிலும் ஆர்வமாக இருப்பார். அணியின் ஸ்கோர் உயர்த்த, குறிப்பிட்ட ஓவரில் அணிக்கு என்ன தேவை என்பதை எப்படி பார்க்க வேண்டும் என்று அவர் செய்தி அனுப்புவார்" என்றார்.
மேலும், "மஹி பாய் எப்பொழுதும் எண்ணங்களை அவசரப்படுத்த முயற்சிக்காதீர்கள் என்பார். ஏனெனில், டி20 கிரிக்கெட்டில், நீங்கள் அதிக பதற்றத்தில் இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு போதுமான நேரம் உள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக, நான் எதிர்கொள்ள 50 பந்துகள் உள்ளன, நீங்கள் 50 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தால் அது அணிக்கு போதுமானது. நான் சிஎஸ்கேவுடன் விளையாடிய காலத்திலிருந்தே அந்த விளையாட்டுத் திட்டம் என்னுடன் ஒட்டிக்கொண்டது" என்றார் ருதுராஜ் கெய்க்வாட்.