போட்டி டிரா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் மழையால் பாதிக்கப்பட்டது. அதனால், ஐந்தாவது நாள் ஒரு பந்து கூட வீசாத நிலையில் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா ரன் மழை
முன்னதாக முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 7 விக்கெட்களுக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் புஜாரா 193, மாயன்க் 77, ஜடேஜா 81, ரிஷப் பண்ட் 159* என பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தனர்.
மழையால் தடைபட்ட போட்டி
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஃபாலோ-ஆன் பெற்றது. ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்ய துவங்கிய 4 ஓவர்களில் போட்டி மீண்டும் மழையால் தடைபட்டது.
ஒரு பந்து கூட வீசப்படவில்லை
நான்காவது நாளின் பாதியில் தடைபட்ட போட்டி, மீண்டும் ஐந்தாவது நாள் தொடரும் என்றும், இந்தியா, ஆஸ்திரேலிய அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றி பெறும் என்றும் எண்ணிய நிலையில், மழையால் ஐந்தாவது நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.
வரலாற்று சாதனை
இதையடுத்து சிட்னி டெஸ்ட் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா உட்பட எந்த ஆசிய அணியும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
முதல் ஆசிய கேப்டன்
அந்த குறையை போக்கியுள்ள இந்தியா முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
3 சதங்கள் அடித்த புஜாரா
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது புஜாரா தான். இந்த தொடரில் 3 சதங்கள் அடித்த புஜாரா இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். அதிக ரன்கள் அடித்த பட்டியலில், கோலியால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
பும்ரா அசத்தல்
பந்துவீச்சில் பும்ரா அசத்தலாக செயல்பட்டார். ஷமி, இஷாந்த் வேகப் பந்துவீச்சில் அவருக்கு அடுத்தபடியாக சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் விக்கெட்களை வீழ்த்தி தங்களை நிரூபித்தனர்.