மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் சில மணி நேரம் தடைபட்டது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டு முறை மழை குறுக்கிட்டது. இந்திய அணி 7 விக்கெட் இழந்த நிலையில் ரன் குவித்து வந்த போது முதல் முறை மழை பெய்தது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி அரைசதம் அடித்து அதிரடியாக ரன் சேர்த்து வந்தார்.
அதனால், மூன்றாவது நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி துவங்கியது. அப்போது நிதிஷ் குமார் சதம் அடித்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. அத்துடன் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது.
இதை அடுத்து மூன்றாவது போட்டியைப் போன்றே இந்தப் போட்டியிலும் அடிக்கடி மழை பெய்து போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வானிலை அறிக்கையில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்தப் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைய வாய்ப்பு இல்லை.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தனர்.
அவர்கள் இருவரும் அரை சதம் அடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பண்ட் 28 ரன்கள் எடுத்தும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். அதன் பின் எட்டாம் வரிசையில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஒன்பதாம் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர்.
அவர்கள் இருவரும் எட்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை தவிக்க விட்டனர். சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி 85 ரன்கள் சேர்த்தார். சுந்தர் 40 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து இருந்தது.
இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தில் சுமார் 20 ஓவர்கள் வரை வீச முடியாமல் போனது. பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. சுந்தர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் சதம் அடித்தார். பின்னர் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி தடைபட்டது.