மெல்போர்ன்: இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறினார் ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன். இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் நான்காம் நாள் அன்று கடைசி ஒரு மணி நேரம் இந்திய அணியை சோதித்தார். அதனால் நான்காம் நாள் முடிவில் இந்திய அணி பின்னடைவை சந்தித்து உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், நான்காம் நாள் அன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடியது. முதலில் தடுமாறி 91 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி விரைவாக ஆஸ்திரேலியாவை ஆட்டம் இழக்கச் செய்து 250 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடும் என ரசிகர்கள் எண்ணினர்.
மார்னஸ் லாபுஷேன் 70 ரன்கள் எடுத்தும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டம் இழந்த போது ஆஸ்திரேலிய அணி 280 ரன்கள் என்ற அளவில் தான் முன்னிலை பெற்று இருந்தது. 9 விக்கெட்கள் வீழ்ந்து இருந்தது. அத்துடன் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆகும் என எண்ணிய நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.
அதன் பின் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லியோன் மற்றும் ஸ்காட் போலான்ட் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர். போலான்ட் ரன் குவிக்க முயற்சிக்காமல் மெய்டன் ஓவராக ஆடினார். மறுபுறம் நாதன் லியோன் வேகமாக ரன் சேர்த்தார். அவர் 54 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதை அடுத்து நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நோக்கி ஆடி வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது. அந்த வகையில் நாதன் லியோன் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை விடுத்திருக்கிறார்.
அவர் எடுத்த 41 ரன்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணிக்கு 280 ரன்கள் என்ற அளவிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அது ஓரளவு எட்டக்கூடிய இலக்காகவும் இருந்திருக்கும். தற்போது நாதன் லியோனின் ஆட்டத்தால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது, ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அவர் மேலும் ரன்கள் சேர்க்க வாய்ப்பு உள்ளது.