மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ட்ராவிஸ் ஹெட் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதை கேட்டு இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
ட்ராவிஸ் ஹெட் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தார். இந்த நிலையில், அவர் நான்காவது போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. ஆனால், அதற்கு முடிவுரை எழுதி இருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.

ட்ராவிஸ் ஹெட்டுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் பெரிதாக இல்லை என பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறி இருக்கிறார். மெல்போர்னில் நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் நிச்சயம் ஆடுவார் எனவும், ட்ராவிஸ் ஹெட் குறித்து சில விஷயங்களை மட்டும் நாங்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறினார்.
இதன் மூலம், மெல்போர்னில் நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணிக்கு பின்னடைவான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ட்ராவிஸ் ஹெட் தவிர்த்து மற்றவர்கள் மொத்தம் 410 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர், ஆனால், ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 409 ரன்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலம், இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றி வருவது ட்ராவிஸ் ஹெட் மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது.