பெங்களூரு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு போன்ற ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருக்கிறது.
அதுவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்தியூ வெட், இந்தியா எங்களை ஒவ்வொரு பிரிவிலும் வீழ்த்தி விட்டதாக பாராட்டினார்.

இது குறித்து பேசிய அவர் நாங்கள் இன்றைய ஆட்டத்தில் நன்றாகவே பந்து வீசியதாக கருதுகிறேன். 160 ரன்கள் என்ற இலக்கு நிச்சயமாக இந்த மைதானத்தில் வெற்றிகரமாக துரத்தக்கூடிய ஸ்கோர் தான். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் விளையாடினால் நன்றாக இருக்கும் என நான் எதிர்பார்த்தேன்.
நாங்கள் அடுத்த டி20 உலக கோப்பை நோக்கி தான் அணியை கட்டமைத்து வருகிறோம். இதில் என்னுடைய பொறுப்பு பேட்டிங்கில் இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் களம் இறங்கி விளையாட வேண்டும். அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வரும் டி20 உலக கோப்பை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரின் ஸ்கோர் இருந்திருக்கும்.
ஆனால் இந்த தொடர் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. இந்த தொடரில் நாங்களும் நன்றாக தான் விளையாடினோம் என நினைக்கிறேன். ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் எங்களை விட சிறப்பாக விளையாடி வீழ்த்தி விட்டார்கள். இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்த இளம் வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இது போன்ற கடினமான ஆடுகளத்தில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு நிச்சயம் கிடைக்காது என்று மேத்யூ வெட் கூறியுள்ளார்.