பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தப் போட்டி துவங்கி 4.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டு இருந்தது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், தொடரை 2-2 எனச் சமன் செய்யலாம் என்ற வாய்ப்பு இருந்தது.

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் ஐந்தாவது போட்டி தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக ரன் குவித்தனர். 4.5 ஓவர்கள் ஆடியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. மீதமிருந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று, சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரை சமன் செய்யலாம் என நினைத்த ஆஸ்திரேலியாவின் திட்டம் ஏமாற்றத்தில் முடிந்தது.