பெங்களூர் : இந்திய அணி அணித் தேர்வில் செய்த சொதப்பலால் ஐந்தாவது டி20 போட்டியில் பேட்டிங்கில் சறுக்கியது.
இந்திய அணியின் ரிங்கு சிங் ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் இருக்கும் போது மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவை அணியில் சேர்த்ததால் பேட்டிங் வரிசையில் குழப்பம் ஏற்பட்டது.
ஒரு அணியில் ஒரு ஃபினிஷர் இருப்பதே சரியான விஷயம். ஆனால், ஜிதேஷ் சர்மாவும் அதிரடி ஆட்டம் ஆடுபவர் என்பதால் அவரையும் ஃபினிஷராகவே அணியில் தேர்வு செய்தார் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.

முதல் மூன்று போட்டிகளில் ஐந்தாம் வரிசையில் திலக் வர்மா, ஆறாம் வரிசையில் ரிங்கு சிங் பேட்டிங் செய்து வந்தனர். திலக் வர்மா போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப நிலைத்து நின்று ஆடுவார் என்பதால் அவருக்கு அந்த இடம் சரியானதாக இருந்தது. அதனால், ரிங்கு சிங் முதல் இரண்டு போட்டிகளில் கடைசி ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ய வந்தார். மூன்றாவது போட்டியில் விக்கெட் விழாததால் ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நான்காவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்றதால் மூன்றாம் வரிசையில் ஆடி வந்த இஷான் கிஷன் நீக்கப்பட்டார். அவர் விக்கெட் கீப்பர் என்பதால் மாற்று விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வழி விட்டு திலக் வர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் ஜிதேஷ் சர்மா அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் ஆறாம் வரிசையில் பேட்டிங் வர திட்டமிடப்பட்டது. ரிங்கு சிங் ஐந்தாம் வரிசைக்கு மாறினார். இந்த மாற்றத்தால் ரிங்கு சிங் முன் கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். நான்காவது போட்டியில் ரிங்கு சமாளித்து 46 ரன்கள் சேர்த்தார். ஆனால், ஐந்தாவது போட்டியில் அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஜிதேஷ் 24 ரன்கள் சேர்த்தாலும், கடைசி ஓவர்களில் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தை இந்தியா இழந்தது.
அதனால் இந்தியா 160 ரன்கள் மட்டுமே சேர்ததது. ரிங்கு சிங் ஐந்தாம் வரிசையில் ஆடாமல், ஆறாவது வரிசையில் இறங்கி இருந்தால் இன்னும் கூட ரன்கள் சேர்த்து இருக்கலாம்.