சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி இதுவரை நடந்த 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று உள்ளது. மீதம் உள்ள மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு டிராவை செய்து உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய வீரர்களை விளாசி வருகின்றன.
இந்திய வீரர்களால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் பலவும் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளன. அதற்கு காரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுவது இந்திய வீரர்களின் அணுகுமுறையைத்தான். குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் விராட் கோலியை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

மேலும், ஜெய்ஸ்வால் விக்கெட் சர்ச்சைக்கு இந்திய அணி சார்பாக வெளியான அதிருப்தியையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து இருக்கின்றன ஆஸ்திரேலிய ஊடகங்கள். முகமது சிராஜ், ட்ராவிஸ் ஹெட்டுக்கு எதிராக கொந்தளித்தது சரியல்ல. சிராஜ் ட்ராவிஸ் ஹெட் உடன் மட்டுமின்றி, இந்த தொடர் முழுவதுமே அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். ஆனால், செயல்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அடுத்து மூத்த வீரரான விராட் கோலி, சாம் கோன்ஸ்டாஸ் இடம் நடந்து கொண்டதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளன. தனது அறிமுக போட்டியில் ஆடும் 19 வயது வீரரான சாம் கோன்ஸ்டாஸ்-உடன் விராட் கோலி மோதியதை யாரும் ரசிக்கவில்லை. மேலும், அது இந்திய அணியின் பலவீனத்தை காட்டுவதாகவும் விமர்சித்து உள்ளன.
அடுத்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் டிஆர்எஸ்-இல் போதிய ஆதாரம் இல்லாத போதும் வீடியோவில் பந்து திசை மாறி செல்வதை மட்டும் வைத்து அவுட் கொடுக்கப்பட்டது பற்றி இந்திய அணியினரும், இந்திய முன்னாள் வீரர்களும் பேசி வருவதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளன.
அந்த விக்கெட்டை ஏற்றுக் கொள்ளாமல் இந்திய அணியினர் சாக்கு சொல்லி வருவதை சுட்டிக்காட்டி உள்ளன ஆஸ்திரேலிய ஊடகங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனநிலையையே இது காட்டுகிறது எனவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இதன் காரணமாக சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெறாது என கூறி உள்ளன.