சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆமை வேகத்தில் பேட்டிங் செய்தது. முதல் 40 ஓவர்களில் இந்திய அணி வீரர்கள் நான்கு பவுண்டரிகளை மட்டுமே அடித்து இருந்தனர். 2002க்கு பின் இந்திய அணியின் பேட்டிங்கில் இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்து இருக்கிறது.
இதற்கு முன் இதே போல முதல் 40 ஓவர்களில் நான்கு பவுண்டரிகளை மட்டுமே அடித்த நிகழ்வு இதே ஆஸ்திரேலிய மண்ணில் தான் நடந்தது. 2020 ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முதல் 40 ஓவர்களில் 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்து இருந்தது.

தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி பெரிதாக ரன் குவிக்காத நிலையில் பயிற்சியாளர் கம்பீர், இந்திய வீரர்களை நிதானமாக ஆடுமாறு கூறி இருந்தார். அதன் காரணமாகவே இந்திய வீரர்கள் பவுண்டரி அடிக்காமல் ஆடி உள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் வீரர்கள் நிதானமாக ஆடிய போதும் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் 40 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதில் நான்கு ஃபோர் மட்டுமே அடிக்கப்பட்டு இருந்தது. ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ராகுல் 4 ரன்களும், சுப்மன் கில் 20 ரன்களும், விராட் கோலி 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து ஆடிக் கொண்டிருந்தனர். அந்த முதல் 40 ஓவர்களில் நான்கு ஃபோர் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் ரிஷப் பண்ட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா ஆகியோர் பவுண்டரிகளை அடித்தனர். ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர்.
இந்திய அணி 72.2 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருந்தது.