சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் கம்பீர் சொன்னதை பின்பற்றாமல் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். அவர் மட்டும் அப்படி ஆடவில்லை என்றால் இந்திய அணி 157 ரன்கள் எடுத்து இருக்காது.
இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் எடுத்த 61 ரன்களை கழித்துவிட்டு பார்த்தால் இந்திய அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் திட்டத்தை பின்பற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை தான் ஆடுவேன் என ரிஷப் பண்ட் பிடிவாதமாக ஆடி 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆட முயன்று தங்களின் விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர். எனவே, இனி யாரும் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடுவதாகக் கூறி விக்கெட்டை இழக்கக் கூடாது என கம்பீர் பேசி இருந்ததாக தகவல் வெளியானது.
குறிப்பாக ரிஷப் பண்ட்டை தான் கம்பீர் அவ்வாறு ஆடக் கூடாது என கூறி இருந்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பண்ட் நிதானமாகவே ஆடி இருந்தார். அப்போது 98 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய கடினமான நிலையில் அவர் அதிரடியாக ஆட முடிவு செய்தார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். 33 பந்தில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரது ஆட்டத்தால் இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. அவர் முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தார். அதன் பின் அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் பந்து வீச முடியாத நிலைக்கு சென்றார்.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களை எடுத்தால் தான் வெற்றி பற்றி யோசிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டம் இழந்தனர். விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே ரிஷப் பண்ட் டி20 போட்டி போல ஆடினார்.
இந்த போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 50 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்து வந்தபோது அவர் 184 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தார். 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்திருந்தார்.