சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்கவில்லை என்றால் இந்திய அணியின் நிலைமை இன்னும் கூட மோசமாக மாறி இருக்கும். 50 ரன்களுக்கு கூட்டணி அமைக்கக் கூட முடியாத அளவுக்கு தான் இந்திய அணியின் பேட்டிங் இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய அணி சிறப்பாக ஆடி இருந்தது.

மற்ற ஒன்பது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்டிங் கவலைக்கிடமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ராகுல், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடர்ந்து தங்களின் விக்கெட்களை பரிசாக அளித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையிலும் அவர்களின் பேட்டிங் படுமோசமாகவே இருந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 22 ரன்களும், கே எல் ராகுல் 13 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
சுப்மன் கில் 13 ரன்களும், விராட் கோலி 6 ரன்களும் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து இந்திய அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. ரிஷப் பண்ட அதிரடியாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். அவர் சென்ற பின் நிதிஷ் குமார் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருக்கிறது. இந்திய அணி 145 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ரன் சேர்க்கவில்லை என்றால் இந்த போட்டியில் வெல்வது மிகவும் கடினம்.