சிட்னி: இந்திய அணியை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலிய அணி போட்ட ஒரு மாஸ்டர் பிளான் வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டது.
நான்கு போட்டிகளின் முடிவில் 2 - 1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகித்த நிலையில் கடைசி போட்டியில் இந்தியா வென்றால் தொடர் சமனில் முடியும். அதை முறியடிக்க வேண்டி சிட்னி மைதானத்தில் அதிக புற்கள் இருக்கும் வகையில் பிட்ச் தயாரிக்கப்பட்டது.

இது போன்ற பிட்ச்சில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும், பேட்டிங் செய்ய கடினமான சூழல் இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் பலவீனமாக இருக்கும் அதே சமயம், வேகப் பந்துவீச்சில் பும்ராவை தவிர வேறு யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதை பயன்படுத்தி வீழ்த்தவே ஆஸ்திரேலியா இந்த திட்டத்தை கையில் எடுத்ததாக தெரிகிறது. அந்த திட்டத்துக்கு ஏற்ப இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களும் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்கள் எடுத்த போதும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 162 ரன்கள் என்ற இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது.
அதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் வெற்றி பெற்றது. சிட்னி மைதான வரலாற்றிலேயே மிக குறைந்த பந்துகளில் முடிந்த மூன்றாவது போட்டி என்ற நிகழ்வும் நடந்தேறி உள்ளது. இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாள் பாதியிலேயே முடிவுக்கு வந்தது. மொத்தம் 1141 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன.
கடைசியாக 1931 ஆம் ஆண்டில் சிட்னி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி 1184 பந்துகளில் முடிவுக்கு வந்து இருந்தது. அந்த 94 ஆண்டு சாதனை இந்த போட்டியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் சிட்னி மைதானத்தில் மிகக் குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டிகளை பார்க்கலாம்.
1895 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டி 911 பந்துகளில் முடிவுக்கு வந்திருந்தது. அதுவே இன்று வரை அந்த மைதானத்தில் மிகக் குறைந்த பந்துகளில் முடிந்த போட்டியாக உள்ளது.
1888 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான மற்றொரு டெஸ்ட் போட்டி 1129 பந்துகளில் முடிவுக்கு வந்திருந்தது. அதன் பின் 2025 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தற்போது நடைபெற்று முடிந்த போட்டி 1141 பந்துகளில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
1931 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி 1184 பந்துகளில் முடிவுக்கு வந்திருந்தது. அந்த சாதனை தான் தற்போது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியை வேகப்பந்து வீச்சின் மூலம் வீழ்த்த வேண்டும் என முடிவு செய்து அதற்கு ஏற்ப பச்சை பசேல் என அதிக புற்கள் நிறைந்த பிட்ச்சை தயார் செய்த ஆஸ்திரேலிய அணி, அதை பயன்படுத்தி இந்திய அணியை வீழ்த்தியும் இருக்கிறது.