IND vs AUS: இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே படுமோசமான 2 ஓவர்கள்.. அதற்கு காரணம் இவங்க 2 பேர்தான்..
சிட்னி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமான முதல் இரண்டு ஓவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வீசப்பட்டது. முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இரண்டாவது இன்னிங்ஸில் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் மட்டும் 26 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
பும்ரா பந்து வீச முடியாத நிலையில் இருந்ததால் இந்த மோசமான சாதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

இதை கட்டுப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் 10 விக்கெட்களை வீழ்த்துவது கடினம் என்றாலும், அதற்கான முயற்சியில் இந்திய அணி இறங்கியது. பும்ரா முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பால் பந்து வீச முடியாத நிலையில் இருந்தார். அதனால், அடுத்த முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா முதல் ஸ்பெல்-ஐ வீசினர்.
முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. சிராஜ் தான் வீசிய மூன்றாவது பந்தை ஒயிடாக வீசினார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. அதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஐந்து ரன்கள் கிடைத்தது. அடுத்து பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரிலும் 13 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.
இதை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸின் முதல் இரண்டு ஓவர்களில் இந்திய அணியால் விட்டுக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தது இந்த நிகழ்வு. மூன்றாவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் சேர்த்தது. அதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் இன்னிங்ஸின் முதல் மூன்று ஓவர்களில் அதிக ரன் சேர்த்த சாதனையை செய்தது.
இந்திய அணி மோசமாக பந்து வீச துவங்கினாலும் அதன் பின் விக்கெட்களையும் வீழ்த்தியது. பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களை எடுத்தார். சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார். அவர்கள் இருவரும் பும்ராவின் இழப்பை ஈடுகட்டும் வகையில் இடைவிடாமல் 21 ஓவர்களை வீசினர். எனினும், ஆஸ்திரேலிய அணி அதற்குள் வெற்றியை நெருங்கியது.


Click it and Unblock the Notifications